குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா?: மோடிக்கு சவால் விடும் திருமாவளவன்..!!

சேலம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா? என்று திருமாவளவன் சவால் விடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த அரசியல் பிள்ளை தான் பாரதிய ஜனதா கட்சி என்றும் மின்னும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற இயலாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டக்கவுண்டம்பட்டியில் பெரியார் பிறந்தநாளை ஒட்டி சமூக நீதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமாவளவன், தலைமுறை, தலைமுறையாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் நியாயமாக கிடைக்கும் நீதியே சமூக நீதி என்று பேசினார்.

மேலும் அவர் ஒடுக்குமுறை என்பது பொது உளவியலாக மாற்றப்பட்டதால் உழைப்பு சுரண்டலும், மூளை சுரண்டலும் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஒரே ஒருநாள் பிரதமராக்க முடியுமா? என மோடிக்கு சவால் விடுத்த திருமாவளவன், மீண்டும்  பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது என்று ஆவேசப்பட்டார். நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, விசிக என அனைத்தும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றாக செயல்பட்டால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற முடியும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Related Stories: