கொள்ளிடம் அருகே பரிதாபம் பசுமாட்டின் காதுகள், வாலை அறுத்து துண்டிப்பு

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே பசுமாட்டின் 2 காதுகள் மற்றும் வாலை அறுத்து துண்டித்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி கிராமம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(51), விவசாய தொழிலாளி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று அப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்றது.

அப்போது அப்பகுதியில் அரசு நிலத்தை அபகரித்து வைத்துள்ள பகுதிக்குள் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த 5 பேர் ஒன்றாகச் சேர்ந்து பசுமட்டை பிடித்து கீழே தள்ளி அரிவாளை எடுத்து இரண்டு காதுகளை அறுத்து துண்டித்தனர். பின்னர் வாலையும் அறுத்து துண்டித்தனர். பின்னர் மாட்டை விரட்டி அடித்துவிட்டனர். அந்த பசு மாடு ரத்தம் சொட்டச் சொட்ட நேற்று அண்ணாதுரை வீட்டிற்கு கத்திக் கொண்டே வந்தது.

இதனைப் பார்த்த அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து அண்ணாதுரை கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசு மாட்டின் இரண்டு காதுகளையும் வாலையும் அறுத்து துண்டித்த 5 பேரை தேடி வருகின்றனர். காயமடைந்த பசுமாட்டிற்கு சாமியம் கால்நடை மருத்துவமனையை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்து வருகிறார். பசுமாட்டை பிடித்து காதுகளை அறுத்து துண்டித்து வாலையும் அறுத்து துண்டித்த சம்பவம் அளக்குடி கிராம மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: