சுரங்கபாதையில் வெள்ளம்!: புதுக்கோட்டை அருகே காரில் சென்ற பெண் மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! `

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே காரில் சென்ற பெண் மருத்துவர் சுரங்கபாதையில் தேங்கிய நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அதேபாதையில் லாரியும் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீரனூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில், பொம்மாடி மலையில் இருந்து துடையூர் செல்வதற்காக ரயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக சுரங்கபாதையில் மழைநீர் புகுந்தது. இதையறியாமல் சுரங்கபாதையில் மருத்துவர் சத்யா காரில் வந்த போது இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நின்றுவிட்டது.

காரில் சிக்கிக்கொண்ட சத்யா, சீட் பெல்ட் அணிந்திருந்ததால் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்துவிட்டார். அவருடன் பயணித்த மாமியார் கார் கதவை திறந்து நீச்சலடித்து தப்பினார். சுரங்கபாதை தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் லேசாக மழை பெய்தாலும் சுரங்கபாதைக்குள் தண்ணீர் கசிந்து நிரம்பிவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை போராட்டம் நடத்தியும் நிறைவேற்று தரவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே அதேபாதையில் வந்த லாரியும் தண்ணீரில் மூழ்கிவிட்டது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சுரங்கபாதையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் சென்று வருவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். ரயில் பாதையை கடப்பதற்க்கு சுரங்கப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: