காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அடிக்கடி உணவகங்கள், இனிப்பகம் , கோயில் மடப்பள்ளி சமையல் கூடங்களில் சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதையொட்டி, உணவகங்களுக்கு சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் தர நிர்ணய அடிப்படையில் வழங்கப்படும். இதை தொடர்ந்து ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை உணவுக் கட்டுப்பாட்டு துறையிடம் 23,418 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் எப்எப்எஸ்ஏஐ சான்றிதழை 8,806 பேர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தலைமை இடமாக கொண்டு 3 இடங்களில் ஸ்ரீரமணாஸ் உயர்தர சைவ உணவகம் செயல்படுகிறது. இங்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, உணவுக் கூடங்கள், சமையல் கூடங்கள், பயிற்சி பெற்ற உணவு பரிமாறுபவர்கள் என அனைத்திலும் சிறப்பாக செயல்படுவது தெரிந்தது.அதில், 106 மதிப்பெண்கள் பெற்று முதல் தர சுகாதார மதிப்பீட்டு தர சான்றிதழை ஸ்ரீரமணாஸ் ஓட்டல் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை காஞ்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா. ஓட்டல் உரிமையாளர் குருவிடம் நேற்று அளித்தார். இதேபோல் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 கோயில் மடப்பள்ளிகளிலும் ஆய்வுகள் நடத்தி, தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா தெரிவித்தார்.