சென்னை: கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், ரயில்வே ஸ்டேஷன் 2வது தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சூசைமேரி (30). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகளை சரிவர கவனித்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 2வது குழந்தை கீர்த்தி (8), 3வது குழந்தை ஆபேல் (5) ஆகியோரை பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், எம்ஜிஆர் தெருவில் உள்ள சூசைமேரியின் அக்கா டார்த்தி வீட்டுக்கு அனுப்பினர். இதனிடையே டார்த்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து, டார்த்தியின் மகள் மேரி (20), அந்த சிறுவர்களை கவனித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஆபேலை தூக்கி கொண்டு மேரி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிறுவன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறினார். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அபேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மேலும், சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் இருந்ததால் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் அக்கா கீர்த்தியிடம் விசாரித்தனர். அதில், மேரி அடிக்கடி சிறுவனை அடித்து, சூடு வைப்பார் என கூறினார்.
இதையடுத்து மேரியிடம் விசாரித்தபோது, சிறுவன் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால், அவனை அடிக்கடி தாக்கியும், சூடு வைத்து கொடுமைப்படுத்தினார். சம்பவத்தன்று மேரி சிறுவனை சரமாரியாக தாக்கி, தலையை பிடித்து சுவரில் மோதியதால் அவன் மயங்கி கீழே விழுந்தான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவான் என நினைத்த மேரி, அப்படியே விட்டுவிட்டார். ஆனால், நீண்ட நேரமாகியும் அசைவின்றி கிடந்ததால், அவன் இறந்தது தெரிந்தது. இதனால் மேரி, சிறுவன் விளையாடும்போது தவறி விழுந்து மயங்கியதாக கூறி நாடகமாடினார் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார், மேரியை கைது செய்தனர்.