பஸ்ஸில் தகராறை கண்டித்தபோது எஸ்ஐ மாரடைப்பால் உயிரிழப்பு

ராமேஸ்வரம்,:  கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் சுக்குப்பாறை தேரிவிளையை சேர்ந்தவர் இந்திரன் (56). இவர் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். மனைவி ஆதிலெட்சுமி, மகன் வரதன், மகள் வதனா உள்ளனர். இந்திரன் 2 வாரங்களுக்கு முன்பு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் வழக்கம்போல் பணியில் இருந்தார்.

அப்போது பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வந்த அரசு பேருந்தில் குடிபோதையில் 2 பேர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிரைவர் தங்கச்சிமடம் காவல் நிலையத்தின் முன்பு பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாரிடம் புகார் செய்தார். பணியில் இருந்த எஸ்ஐ இந்திரன் சக போலீஸ்காரர் ஒருவருடன் பேருந்து அருகில் சென்று, தகராறில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை செய்து கண்டித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சக போலீசாரும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: