அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 17 அவதூறு வழக்குகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆஜராக நிர்பந்திக்க கூடாது: சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  அதிமுக ஆட்சிக் காலத்தின்போது, சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக 17 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டது.இந்நிலையில் திமுக ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக  தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்து அதுதொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  இதற்கிடையே, எம்.பி, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 17 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் அவதூறு வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் கோரப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 17 அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணையை மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகம்மது ஜின்னா தாக்கல் செய்தார்.அப்போது, நீதிபதி வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டார்.  மேலும், இந்த வழக்குகளில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு (எம்.பி, எம்.எல்.ஏக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்) உத்தரவிட்ட நீதிபதி, மனு மீது அடுத்த மாதம் 8ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை தள்ளிவைத்தார்.

Related Stories: