குடும்பம் நடத்த வராததால் கணவன் ஆத்திரம்; தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொடூர கொலை: ஐஸ்அவுஸ் பகுதியில் பயங்கரம்

சென்னை: குடும்பம் நடத்த தன்னுடன் வராததால் ஆத்திரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு படுகொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (22). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரத்தை சேர்ந்த கொத்தனார் சுப்பிரமணியன் (35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சஞ்சய் (3) என்ற மகன் உள்ளான்.

சுப்பிரமணியன், வடபழனியில் வேலை செய்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மது அருந்தி அழித்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கனிமொழி, ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள தனது அம்மா வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். கனிமொழியின் தாய் நடைபாதையில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், பிரிந்து சென்ற மனைவியை சேர்ந்து வாழ சுப்பிரமணியன் அழைத்துள்ளார்.

அதற்கு கனிமொழி, ‘சென்னையில் வீடு இல்லாத உன்னுடன் எப்படி சேர்ந்து வாழ்வது, நடைபாதையில் என்னால் உன்னுடன் குடும்ப நடத்த முடியாது’ என்று கூறியுள்ளார். இதனால் சுப்பிரமணியன் ஆத்திரமடைந்தார். இந்நிலையில் சுப்பிரமணியன் இன்று அதிகாலை 1 மணியளவில் போதையில் வந்து மீண்டும், கனிமொழியை அழைத்துள்ளார். அதற்கு அவர், ‘குடித்து விட்டு நள்ளிரவில் தகராறு செய்கிறீர்களா’ என கேட்டு விட்டு தூங்க சென்று விட்டார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுப்பிரமணி, வீட்டுக்குள் நைசாக சென்று, அங்கு தூங்கி கொண்டிருந்த கனிமொழியின் தலையில், அம்மிக்கல்லால் தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கனிமொழி அலறி துடித்தார். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த கனிமொழியின் சகோதரியான நதியாவின் மகன் ஓடிவந்து பார்த்தார். கனிமொழி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.  ஊழியர்கள் பரிசோதித்து பார்த்த போது கனிமொழி இறந்து விட்டது தெரிந்தது. தகவலறிந்து ஐஸ் அவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிமொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

Related Stories: