பனை மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் : ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண்துறைக்கு வழங்கினார்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (17.9.2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள் பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு வழங்குவதை குறிக்கும் விதமாக பனை விதைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டு 30 மாவட்டங்களில், 76 இலட்சம் பனை விதைகளையும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று 2021-22ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு அவர்கள் ஒரு இலட்சம் பனை விதைகளை வழங்குவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது உறுதி அளித்தார். அதன்படி, மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் பனை விதைகள், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டு திட்டம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் திரு.ஏ.அண்ணாதுரை, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் திருமதி ஆர். பிருந்தாதேவி, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் திரு. ஸ்வரன் குமார் ஜடாவத், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: