விஷம் வைத்து மயில்கள் கொலை: தேசியக்கொடி போர்த்தி மரியாதை

திருமலை: விஷ உணவு கொடுத்து கொல்லப்பட்ட 5 மயில்களுக்கு தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நர்ரவண்டலப்பள்ளி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மயில்கள் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 5 மயில்கள் இறந்திருப்பது தெரிந்தது.

கிராமத்தை ஒட்டி வனப்பகுதி உள்ளதால் அங்கிருந்து அடிக்கடி இரை தேடி வரும் மயில்களுக்கு யாரோ மர்மநபர்கள் விஷம் கலந்த உணவை வைத்து கொன்றிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து இறந்த மயில்களின் உடல்கள் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மயில்கள் விஷ உணவை தின்றதால் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து 5 மயில்களையும் அங்குள்ள வனப்பகுதியில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர். தேசிய பறவையாக மயில்கள் போற்றப்படுவதால் தேசியக்கொடியை அவற்றின் மீது போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அவற்றை அடக்கம் செய்தனர். இதனிடையே விஷம் வைத்து மயில்களை கொன்றது யார்? என கிராம மக்களிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த வருடம் கோவை - திருச்சி சாலையில் மின்மாற்றி ஒன்றின் மீது அமர்ந்த மயில் மீது மின்சாரம் பாய்ந்ததால் இறந்தது. அந்த மயிலுக்கு தேசியக் கொடியை போர்த்தி போலீஸ்காரர் ஒருவர் அஞ்சலி செலுத்தினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: