பின்னடைவை மறைக்கவே பாஜவில் மாற்றங்கள்: முத்தரசன் பேட்டி

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்கவுள்ள ஆளுநர், காலதாமதமின்றி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் வழங்காமல் மாணவ, மாணவிகளை வஞ்சித்தால் போராட்டம் தீவிரமடையும். நாடு முழுவதும் பாஜ பின்னடைவை சந்தித்து வருகிறது.

அதை சரி கட்டுவதற்காக தான் மத்திய அமைச்சர்களை மாற்றுவது, மாநில முதல்வர்களை மாற்றுவது, தோற்றவர்களுக்கு கவர்னர் பதவி அளிப்பது, புதிய கவனர்களை நியமிப்பது என்று புதிது புதிதாக தலைவர்களை கொண்டு வருகின்றனர். இப்படி தான் அந்த கட்சி உள்ளது. லஞ்ச ஒழிப்பு புகாரில் சோதனைக்கு செல்லும் அதிகாரிகளை தடுக்க முயற்சிக்கும் நோக்கில் போராட்டங்களில் ஈடுபடுவது குற்றமாகும். பிரச்னையை திசை திருப்புவதற்கான முயற்சி தான் இந்த போராட்டம்.

ஆனால், திசை திருப்ப முடியாது. கொடநாடு விவகாரத்தில் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு. யாராக இருந்தாலும் குற்றம் செய்யாவிட்டால் ஏன் பயப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: