குளித்தலையில் தனியார் வங்கி எதிரில் விபத்து ஏற்படுத்தும் வகையில் தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை திருச்சி கரூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி எதிரே விபத்தை ஏற்படுத்த கூடிய தாழ்வான நிலையில் சாலையின் குறுக்கே தொங்கும் மின் கம்பிகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை திருச்சி கரூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் எதிரே வாய்க்கால் ஓரம் கம்பம் ஒன்று உள்ளது. ஏராளமான இணைப்புகள் உள்ளன. இதனால் குறுக்கே மின் கம்பிகள் உள்ளது. மின் கம்பிகள் பல நாட்களாக தாழ்வான நிலையில் சாலையின் குறுக்கே செல்கிறது. திருச்சி மார்க்கத்தில் இருந்தும், கரூர் மார்க்கத்திலிருந்தும் பயணிகள் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள பகலிரவு என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் தாழ்வான நிலையில் கம்பிகள் தொங்கிய நிலையில் இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து திருச்சி கரூர் சாலையில் தனியார் வங்கி எதிரே தென்கரை வாய்க்கால் ஓரம் உள்ள மின்கம்பத்தில் தாழ்வான மின் கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: