சாத்தூரில் பராமரிப்பின்றி பாழடைந்து வரும் ஆங்கிலேயர் காலத்து பாலம்: சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சாத்தூர்: சாத்தூரில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் வைப்பாற்று பகுதியை கடப்பதற்காக ஆங்கிலோயர் ஆட்சி காலத்தில் 1863ம் ஆண்டு பாலம் கட்டி முடிக்கபட்டது. 14 அடி அகலமும் 840 அடி நீளமும் கொண்டதாக அமைக்கபட்ட இந்த பாலத்தின் வழியாக ஆங்கிலேயர்களின் குதிரை வண்டிகள் மட்டும் செல்வதற்காவே இந்த பாலம் கட்டபட்டது. வருடங்கள் கடந்த பின்னர் இந்த பாலத்தில் கனரக வாகனங்கள்,பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே போக்குவரத்திற்காக பயன்படுத்தபட்டு வந்தது. 156 ஆண்டுகளை கடந்தாலும் பாலம் கம்பீரமாகவும் உறுதியாகவும் இருந்ததாக நெடுஞ்சாலைதுறையினர் கூறுகின்றனர்.

சாத்தூர் பிரதான சாலையில் உள்ள இந்த பாலம் வழியாக கோவில்பட்டியை கடந்து கன்னியகுமரி மற்றும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலமாக இருந்தது. சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அதிக பக்தர்கள் வரும் நாட்களில் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் இரண்டு வாகனம் செல்லும் அளவிற்கு புதிய பாலம் அமைக்கப்பட்டது.

இதுகுறித்து சாத்தூர் மக்கள் கூறுகையில், இதுபோன்று வரலாற்று சிறப்புமிக்க ஆங்கிலேயர் காலத்தில் கட்டபட்ட பாலத்தை நெடுஞ்சாலைதுறையினர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அதனால், இப்பாலம் தற்போது சமூக விரோதிகளின் புகழிடமாக மாறி வருகிறது. மேலும், பாலம் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு பாலத்தில் விளக்குகள், சாலையை சீர் செய்தால் பாலத்தை கடந்து அமீர்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வசிப்பவர்கள் நடந்து செல்பவர்களுக்கும், பொதுமக்களின் நடைபயிற்சிக்கும் பயன்படுத்தி கொள்ளலாம், என்றனர்.

Related Stories: