''சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் ''தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..!!

சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடர் தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியாரின் உருவச்சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சசிகலா மலர்தூவி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பெரியார் திடலில் கி.வீரமணி, வைகோ உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் பெரியார் திருவுருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல்முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்வு நடைபெறுகிறது.

சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியை எனது வாழ்வியல் வழிமுறையாக கடைபிடிப்பேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பண்பு நெறியை எனது வாழ்வின் வழிமுறையாக கடைபிடிப்பேன். சுயமரியாதை, ஆளுமைத் திறனும், பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும்

இவ்வாறு தலைமைச் செயலக வளாகத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Related Stories: