ஜெய்ப்பூர் : தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.மேலும் மாநகரம் மற்றும் நகர் பகுதிகளில் விதிகளை மீறி சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. விதிகளை மீறி அமைக்கப்பட்ட சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் வசூல் காலம் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் டௌசாவில் டெல்லி - மும்பை விரைவு சாலையை ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் தரமான சாலைகள் போடப்பட்டு வருவதாக கூறினார்.நகரங்களுக்கு இடையே விரைவு சாலைகள் அமைப்பதால் பயண நேரம் குறையும் என்றும் தரமான சாலைகள் வேண்டுமென்றால் மக்கள் பணம் செலுத்ததான் வேண்டும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். நாடு முழுவதும் தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிதின் கட்கரி கூறினார். டெல்லி - மும்பைக்கு விரைவு சாலை அமைப்பதால் பயண நேரம் 48ல் இருந்து 18 மணி நேரமாக குறையும் என்றும் எரிபொருள் செலவு குறையும் என்றும் அவர் தெரிவித்தார். சாலை போக்குவரத்தை மேம்படுத்தினால் மட்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்றும் அமைச்சர் நிதின் கூறினார்.