காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 435: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், பதற்றமான வாக்குச்சாவடிகள் 435 உள்ளது. நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஆர்த்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்டமாக காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களுக்கு அக்.6ம் தேதி, 2ம் கட்டமாக பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களுக்கு 9ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஆண்கள் 51,127, பெண்கள் 54,705, திருநங்கைகள் 12, வாலாஜாபாத்தில் ஆண்கள் 50,710, பெண்கள் 54,831, திருநங்கைகள் 7, உத்திரமேரூரில் ஆண்கள் 50,993, பெண்கள், 53,423, திருநங்கைகள் 7, பெரும்புதூரில் ஆண்கள் 44,387, பெண்கள் 48,964, திருநங்கைகள் 11, குன்றத்தூரில் ஆண்கள் 1,34,049, பெண்கள் 1,38,464, திருநங்கைகள் 41 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 6,81,731 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தம் 1,281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட காவல் எல்லையில் 347, மாநகர காவல் எல்லையில் 88 என மொத்தம் 435 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக என கண்டறியப்பட்டுள்ளது.தேர்தல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை கண்காணிக்க வட்டாட்சியர் தலைமையில் 15 பறக்கும் படைகள் அமைத்து, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவு பணிக்காக மாவட்டத்தில் மொத்தம் 10,433 அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். முதல்கட்ட தேர்தலுக்கு 5,659 அரசு ஊழியர்களும், 2ம் கட்ட தேர்தலுக்கு 4,774 அரசு ஊழியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தேர்தல் தொடர்பான புகார்களை 044-27237680 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.362 பேர் வேட்புமனு தாக்கல்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ம் தேதி 3 ஓன்றியங்களிலும், 9ம் தேதி 2 ஓன்றியங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் என மொத்தம் 2321 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி முதல் 2 நாட்களில் ஊராட்.சி வார்டுகளில் உள்ள 1938 உறுப்பினர் பதவிகளுக்கு 238 பேர், 274 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பதவிக்கு 79 பேர், 98 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.11 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்கு 2 நாட்களில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மொத்தத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2321 பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 362 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வரையறையில் குளறுபடி

குன்றத்தூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள குறிப்பிட்ட வார்டில் உள்ள இஸ்லாமிய மக்களின் வாக்குகள், சம்பந்தமே இல்லாமல் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. வார்டு வரையறை செய்ததில் ஏற்பட்ட குளறுபடியில், நந்தம்பாக்கம் ஊராட்சி செயலர் பவானி முக்கிய காரணம் என அப்பகுதி இஸ்லாமிய மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், முறைகேடில் ஈடுபட்ட ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குன்றத்தூர் போலீசில், நேற்று பொதுமக்கள் புகார் அளித்தனர். அதில், வார்டு வரையறை மீண்டும் சரி செய்து தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இதையொட்டி, வார்டு உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், நேற்று அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நந்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Related Stories: