கும்பகோணத்தில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது

கும்பகோணம்: கும்பகோணத்தில் 23 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் நேற்று கைது செய்யப்பட்டார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகரில் வசிப்பவர் சேகர் (57). அரசு உதவி பெறும் கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி கணித ஆசிரியரான இவர், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2004 முதல் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது மாணவிகள், தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சேகரிடம் விசாரணை செய்யும்போது அவர் அவ்வப்போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு கடந்த 1ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது ஆசிரியர் சேகர், 11ம் வகுப்பு படிக்கும் 23 மாணவிகளிடம் தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயாவிடம் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடந்தது. இதுதொடர்பாக பள்ளி சார்பிலும், மாணவிகளும் தஞ்சை எஸ்.பி ரவளி பிரியாவிடம் கடந்த வாரம் புகார் மனு கொடுத்தனர். இது தெடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் பட்டதாரி ஆசிரியர் சேகரை நேற்று கைது செய்தனர். பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், மாணவிகளின் புகார் மீது உண்மை இருப்பது தெரிய வந்ததால் ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

Related Stories: