கொரோனா தொற்றால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனாவால் பலியானார் என்று சான்றிதழ் வழங்கப்படாததால் அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என்று ஸ்ரீராஜலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு விதிகள் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மாவட்ட குழுக்கள் ஆகஸ்ட் 31க்கு முந்தைய மரணங்கள் குறித்து ஆய்வு செய்து அக்டோபர் 31ம் தேதிக்குள் இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கிய சான்றிதழ்களில் கொரோனா மரணம் என்று குறிப்பிடாமல் இருந்து ஆய்வில் கொரோனாவால் மரணம் அடைந்தவர் என்று தெரிய வந்தால் ஒரு மாதத்திற்குள் கூடுதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: