மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளின் இறுதி விசாரணை: அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்த உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோர் அளித்த அறிக்கைகளையும், நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்த்து வாதிட வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

நீட் தேர்வு நடைபெற்றுள்ள நிலையில் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். அரசு தரப்பின் இந்த வாதத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: