சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பணம், நகை, கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.34 லட்சம், 1.84 லட்சம் மதிப்புள்ள அமெரிக்கன் டாலர், 5 கிலோ தங்கம், 7.2 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோன்று, கே.சி. வீரமணிக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இவற்றில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் பங்குதாரர்கள், உறவினர்கள், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் இருந்து பணம், நகை, கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி இன்று காலை முதல் நடந்த சோதனையின்போது, 34.01 லட்ச ரூபாய் பணம், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அன்னியச் செலாவணி டாலர், 4,987 கிலோ மதிப்பில் 623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, வங்கிக் கணக்கு மற்றும் புத்தகங்கள் முக்கிய ஆவணங்கள், ரோல்ஸ்ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் 30 லட்ச ரூபாய் மதிப்பில் 275 யூனிட் மணலை தனது வீட்டில் அமைச்சர் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது.