மாஜி அதிகாரிகளின் வீட்டில் இருந்து ஆப்கான் வங்கியில் குவியும் பணம்: மத்திய வங்கிக்கு தலிபான் ஆதரவு தலைவர் நியமனம்

காபூல்: ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் ரொக்கம், அந்நாட்டின் மத்திய வங்கிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. ஒருபுறம், மக்கள் உணவுக்காக சிரமங்களை சந்திக்கின்றனர். மறுபுறம், நாட்டின் நாணய கொள்கை பலவீனமடைந்து வருகிறது. தலிபான் அரசாங்கம் தற்போது வெளிநாட்டு நிதியை மட்டுமே சார்ந்துள்ளது. சீனாவிலிருந்து பெரிய முதலீடுகளையும், அமெரிக்காவிடம் இருந்து உதவிக்கரத்தையும் தலிபான்கள் நீட்டியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் அதிபர் மற்றும் அரசு அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.

மத்திய வங்கியின் ஆளுநராக மாறிய ஹாஜி இத்ரிஸ் என்பவரை, மத்திய வங்கியின் இடைக்கால தலைவராக தலிபான்கள் நியமித்துள்ளனர். இவர் மீது பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டு உள்ளதாகவும், அவர் தலிபான்களுக்கும், அல்-கொய்தாவுக்கும் இடையில் பணப் பரிவர்த்தனை செய்தவர் என்று முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே குற்றம் சாட்டி உள்ளார். ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து, மத்திய வங்கி மிகப் பெரிய தொகையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. புள்ளிவிபரங்களின்படி 1,23,68,246 டாலர் இருக்கும் என்கின்றனர். முன்னாள்  அதிகாரிகளின் வீட்டில் இருந்து எப்படி பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கை எப்போது எடுக்கப்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், மத்திய வங்கி  பெருமளவு பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: