சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோவில்களில் 3 வேளையும் அன்னதானம் : அசத்தல் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.9.2021) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்செந்தூர்- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

இறையருள் பெற திருக்கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலகட்டங்களிலும் திருக்கோயில்கள் மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. இதனைப் பின்பற்றி கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஏழை எளிய மக்களின் பசியினை போக்கும் விதமாக திருக்கோயில்கள் சார்பாக 44 இலட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்று அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் பெறப்பட்டுள்ளது.

தற்போது, பழநி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருவரங்கம் - அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று திருக்கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும்.          

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,  மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு. நாசர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: