அரக்கோணம்: அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னை, காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.30 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது, ரயில் இன்ஜின் முன்பகுதியில் ஒரு ஆணின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இருப்பதை கண்டு பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவறிந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலையை கைப்பற்றினர்.
இதையடுத்து, ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில், சென்னையில் உள்ள அம்பத்தூர்-பட்டரவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் தலை இல்லாமல் ஆணின் உடல் மட்டும் இருப்பதாக பெரம்பூர் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்து. இதையடுத்து, போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், அரக்கோணத்தில் கிடைத்த தலையும், சென்னையில் கிடைத்த உடலும் ஒன்று என்பது தெரியவந்தது.
மேலும் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் சென்னை அம்பத்தூரை சேர்ந்த பிரபு(50) என்பது தெரியவந்தது. அவரை யாராவது கொலை செய்து தலையை துண்டித்து வைத்தனரா? அல்லது ரயிலில் சிக்கி இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.