புழல்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், பைக் பெட்டியை சோதனை செய்தனர். அதில், போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, பைக் மற்றும் 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அதில், சென்னை சைதாப்பேட்டை, வெங்கடாபுரத்தை சேர்ந்த சந்திரராஜ் (22), ராமநாதபுரம் மாவட்டம் அசாருதீன் (21) என தெரிந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பலருக்கு சப்ளை செய்கின்றனர் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து, பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.