சீனாவில் வேகமெடுக்கும் டெல்டா வகை ​கொரோனா பரவல்!: பள்ளிகள் மூடல்..மக்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள உத்தரவு..!!

பெய்ஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல நாடுகளும் தொடர்ந்து கடும் சிரமங்களை சந்தித்தது. தீவிர ஆய்வின் விளைவால் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டது. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி மூலம் கொரோனா பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது.

மற்ற நாடுகளில் 2வது அலை, 3வது அலை பரவிய நிலையில், சீனாவில் அதன் தாக்கம் மிக குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பியூஜியான் மாகாணத்தில் உள்ள புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.  அவர் மூலம் நூற்றுக்கும் அதிகமானோருக்கு டெல்டா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட, அந்த சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்கு டெல்டா வகை ​கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புட்டியான் நகரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்று சீன அரசு கருதுகிறது.  இதனால் அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ள  தயாராக இருக்க வேண்டும் எனவும் சீனா அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: