×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஜொலிக்கும் கொலுப் படிகள்


*நவராத்திரி கொலுவிற்கு கார சுண்டல் செய்யும்போது சுண்டலை இறக்கும் நேரத்தில் சிறிது கசகசா, லவங்கம், கடலைப்பருப்பு, பட்டை, நறுக்கிய மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துப்போட்டுக் கிளறி இறக்கினால் சுண்டல்  மிக அருமையாக இருக்கும்.

*சுண்டலில் காரமும், உப்பும் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சில ரஸ்க் துண்டுகளைப் பொடித்து சுண்டலில் சேர்த்தால் சுண்டல் சரியான டேஸ்டுக்கு வந்துவிடும்.

*கொண்டைக்கடலை சுண்டல் செய்ய ஊறப்போட மறந்துவிட்டால் எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்றாக வெந்துவிடும்.

*நவராத்திரிக்கு கொலுப் படிக்கட்டுகள் அமைக்கும்போது அழகான கலர் ஜிகினாக்களை ஒட்டி விட்டால் படிக்கட்டுகள் ஜொலிக்கும்.

*பழைய பாட்டில் மூடிகளை எடுத்துக் கொண்டு அதில் மணலை நிரப்பி அதன் நடுவே மிகச்சிறிய பொம்மைகளை வைத்தால் தடுமாறிக்கீழே விழாமல்
நேராக நிற்கும்.

*ரங்கோலி கோலம் போட்டவுடன் அதன் மீது கலர் ஜிகினாத் தூள்களை தூவி விட்டால் கோலம் பல கலர்களில் பளபளவென மின்னலிட்டு காண்பவர்களை கவர்ந்திழுக்கும்.

*விநாயகர் சதுர்த்தியின்போது கடைகளில் கிடைக்கும் கலர் கலர் குடைகளை நிறைய வாங்கி வைத்திருந்தால் நவராத்திரி கொலுவில் பல கடவுளர்களின் தலையில் குடையை நூல் கொண்டு கட்டி விட்டால் தர்பாரில் அமர்ந்த தோற்றம் தந்து தூள் கிளப்பும்.

*மலை செய்வதற்கு காலி பானையைக் கவிழ்த்தி மண் அல்லது மணலால் மூடிவிட வேண்டும்.

*கொண்டைக்கடலையுடன், பச்சைப் பட்டாணியை கலந்து சுண்டல் செய்தால் கலர்ஃபுல்லாக இருக்கும்.  

- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

*முழுக் கத்தரிக்காய் கறுக்காமல் சுடுவதற்கு காஸ் அடுப்பில் தோசை சுடும் கல்லைப் போட்டு அதன்மீது முழுக் கத்தரிக்காயை வைத்து அதை ஒரு பாத்திரத்தினால் மூடி சிறிது நேரம் வைத்து எடுத்தால் உள்ளே நன்றாக வெந்துவிடும்.

*ரவையை உப்புப்போட்டு பிசிறி வைத்து அதனுடன் உளுந்தை அரைத்துப்போட்டு தோசை வார்த்தால் அது ஏ ஒன் ஆக இருக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*நல்லெண்ணெயை விரல் முனையில் தடவிக்கொண்டு, கத்தரிக்காயை நறுக்கினால் கறை படியாது.

*பிளாஸ்டிக் பேப்பரைப் போட்டு, அதன் மீது உப்பைப் போட்டு வைத்தால் உப்பு கசிந்து நீராகாது!

*அடைக்கு அரைக்கும்போது சிறிது ஜவ்வரிசி, சிறிது கோதுமை சேர்த்து ஊற வைத்து அடை மாவுடன் அரைத்தால் அடை மொறு
மொறுப்புடன் சாஃப்ட்டாக இருக்கும். டேஸ்டும் கூடுதலாக இருக்கும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

*குழம்பு வைக்கும்போது கொதி வந்தபிறகு காய்கறிகளைப் போட வேண்டும். காய்கள் நன்றாக வெந்த பிறகு தாளித்து இறக்கினால் குழம்பு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

*கருணைக்கிழங்கு வாங்கும்போது நல்ல சிவந்த நிறத்தில் உள்ளதாகப் பார்த்து வாங்கினால் கிழங்கு சீக்கிரம் வெந்து விடும்.

*எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும்.
- கே.ஆர்.உதயகுமார், சென்னை.

* கிரைண்டர், டைனிங் டேபிள் துடைக்கும் ஸ்பாஞ்சை துடைக்கப் பயன்படுத்திய பிறகு சுத்தமாக அலசி காய வைத்து, ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்தால் ஸ்பாஞ்ச் வீணாகாமல் நீண்ட நாட்களுக்கு வரும்.

*மொசைக் தரையில் அழுக்குப்படிந்து கறையாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சாக்பீஸ் தூளும், சலவைச் சோடாவும் சேர்த்து ஸ்பாஞ்சை வைத்து அழுந்தத் துடைக்க வேண்டும். பிறகு நல்ல தண்ணீரில் தரையைத் துடைத்தால் பளபளப்பாகி விடும்.
- எஸ்.நிரஞ்சனி, முகலிவாக்கம்.

* தினை மாவில் சிறிது தேன் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசையவும். பின் கையில் ஒரு உருண்டை எடுத்து குழியாக்கி குழியில் தேங்காய்த்துருவல், வெல்லத்தூள், ஏலத்தூள் இவைகளை கலந்து, மாவின் குழியில் வைத்து பூரணமாக்கி உருட்டவும். இந்த இயற்கையான சுகியனை அப்படியே சாப்பிடலாம். நார் சத்துள்ளது. உடலுக்கு பலம் தருவது. குழந்தை பேற்றைத் தரும் சக்தி பெற்றது.
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம்.

*வெள்ளரிக்காயை சிலைசுகளாக நறுக்கி பஜ்ஜி போட்டு சாப்பிட அதன் சுவையே தனி!

*அடைக்கு ஊற வைக்கும்போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைக்க, அடை மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

*ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது அதில் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்க்க ஆப்பம் மிக மிருதுவாக இருக்கும்.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

Tags :
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!