×

மழைக்கால அழகுக்குறிப்புகள்!

மழைக்காலம் துவங்கிவிட்டாலே அச்சம்தான். என்னுடைய சருமம் ஏற்கனவே வறண்ட சருமம் தான். மழைக்காலங்களில் மேலும் வறண்டு போய் காணப்படும். அது மட்டும் இல்லாமல் உதடு மற்றும் கால் பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். இந்த சமயத்தில் என் சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்றும் அறிவுரை கூறுங்கள்.- ரதி, சின்ன சேலம்.

பொதுவாக பார்த்தால் எல்லோருடைய சருமமும் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். எவ்வாறு ஒருவரின் முக அமைப்பு போல் மற்றவரின் முக அமைப்பு இருப்பதில்லையோ அதே போல் தான் ஒருவர் சருமம் போல் மற்றவரின் சருமம் இருக்காது. அது அவரவருக்கு ஏற்ப மாறுபடும். இவ்வாறு மாறுபடும் சருமங்கள் பல வகைப்படும் என்கிறார் அழகுக் கலை நிபுணர் சுமதி.

சருமத்தின் வகைகள்

சாதாரண சருமம்(Normal Skin) : இந்த சருமத்தை உடையவர்களுக்கு எந்த விதமான மேக்கப்பும், அழகு சாதனமும் ஒத்துக் கொள்ளும். இவர்களுக்கு சரும பிரச்னைகள் பெரிய அளவில் ஏற்படாது. எண்ணெய்ப் பசை அதிகம் இருக்காது. அதே போல் சருமமும் வறண்டு போகாது. அதனால் இவர்கள் எதைப் பற்றியும் கவலைப் பட தேவையில்லை.

உலர்ந்த சருமம்(Dry Skin) : எப்பொழுதும், தோல் வறட்சியாக காணப்படும். இவர்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அதற்கு முகத்தை க்ளென்சிங் மில்க் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை கைகளில் எடுத்துக் கொண்டு முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் வட்டமாக தேய்க்க வேண்டும். மூலிகை கலந்த கிளென்சர், மாய்சரைசர் உபயோகப்படுத்தலாம். மூலிகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் பக்க விளைவுகளோ எந்தவிதத் தீங்கோ ஏற்படாது.

எண்ணெய்ப் பசை சருமம் (Oily Skin) : எவ்வளவு மேக்கப் போட்டாலும் அடிக்கடி முகத்தை கழுவினாலும் எப்போதும் எண்ணெய்ப் பசையுடன் காணப்படும். இந்த சருமம் உள்ளவர் கிளென்சர் உபயோகிக்கலாம். இது எண்ணெய்ப் பசையை குறைக்கும். இவர்கள் அட்வான்ஸ் கிளென்சரும் டோனர் பயன்படுத்தும் போது, எண்ணெய்ப் பசையால் முகத்தில் தங்கி இருக்கும் அழுக்கு நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு மாய்சரைசர் (ஈரப்பதம்) தேவை என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆயில் ப்ரீ மாய்சரைசர் உபயோகப்படுத்தினால் முகம் புத்துணர்வோடு இருக்கும்.

காம்பினேஷன் சருமம் (Combination Skin) : அதாவது ஒரு பகுதி எண்ணெய்ப் பசையுடனும் மறுபகுதி உலர்ந்தும் காணப்படும். அழகு நிலையங்களில் பரிசோதனை செய்து உலர்ந்த சருமம் எங்கு உள்ளது. எண்ணெய்ப் பசை சருமம் எங்கு உள்ளது என்று கண்டறிய வேண்டும். பின் அதற்கு தகுந்த மாதிரி மேக்கப் உபயோகப்படுத்த வேண்டும்.

மென்மையான தோல் (Sensitive Skin) : உங்கள் சருமம் சென்சிடிவ் சருமமா என்பதை அழகு நிலையங்களில் பரிசோதனை செய்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த மாதிரி சருமம் உள்ளவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிடும் உணவு, வெளியே போடும் மேக்கப்பும், க்ரீம், லோஷன் போன்றவைகளும் கவனமாக கையாள வேண்டும். சிலருக்கு அன்னாசி பழம். தக்காளி, எலுமிச்சை, கத்திரிக்காய் கூட அலர்ஜியை தரும். சிலருக்கு ஹேர் டை அலர்ஜியை தரும். புதிதாக மேக்கப் போட்டாலும் அலர்ஜி தான்.

எப்படி பராமரிப்பது?


4சருமத்தின் பளபளப்பு மற்றும் புத்துணர்ச்சிக்கு வைட்டமின் சி மிகவும் நல்லது. உடலின் எதிர்ப்பு சக்தியை வளர்க்கக் கூடிய சக்தி இதற்குண்டு. சிலருக்கு வெயிலில் சென்றால் உடல் கறுத்துவிடும் (அ) திட்டு திட்டாக படலம் வரும். இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும். உணவில் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, நெல்லிக்காய், பெர்பெரி, எலுமிச்சை, கொய்யா அடிக்கடி சேர்த்து கொள்ளவும். ஒரு நாளைக்கு 500மிலி கிராம் அளவுக்கு இந்த வைட்டமின் உடலில் சேர வேண்டும். உணவுப் பொருள் மூலமாக இதைப் பெற முடியும். இல்லையெனில் அதற்கு இணையான வைட்டமின் சி மாத்திரையை டாக்டரின் ஆலோசனை படி சாப்பிடலாம்.  நெல்லிக்காய், தயிர் பச்சடி அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும். நெல்லிக்காய் அதிக அளவு வைட்டமின் சி சத்து கொண்டது.

4தோலை பாதுகாக்க உதவும் மற்றொரு வைட்டமின் ஈ. இதனை உணவாகவும் சாப்பிடலாம். சருமத்திலும் தடவலாம். பாதாம் பருப்பினை 1-3 தினமும் சாப்பிடவும். இதனால் உடல் பலம் பெற்று சருமம் பளிச்சென்று இருக்கும். இரவில் பாதாம் பருப்பை ஊற வைத்து மறுநாள் காலையில் அதை நைசாக அரைத்து பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் சருமம் பளபளப்பாகும்.

4வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தில் பாலை தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். வீட்டில் பன்னீர் இருந்தால் பால் ஏடையையும் பன்னீரும் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவலாம். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

4உலர்ந்த தோல் உள்ளவர்கள் அடிக்கடி சோப்பு போட்டு முகம் கழுவக்கூடாது. சோப்பு மேலும் தோலை வறண்டு போக செய்துவிடும். பாதாம் எண்ணெய் கிளிசரின் கொண்ட ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம். அல்லது அந்த எண்ெணயை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம்.

4வறண்ட சருமம் உள்ளவர்கள் ஏ.சி அறையில் வேலைப் பார்க்கும் போது, அவர்களின் சருமம் மேலும் வறண்டு போகும். அவர்கள் கையோடு பெட்ரோலியம் ஜெல்லி, கிளிசரின் போன்றவற்றை எடுத்துச் செல்லவும். சருமம் வறண்டாலோ, உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க இதனை அவ்வப்போது, பயன்படுத்திக் கொள்ளலாம்.

4வறண்ட தோல் உடையவர் வாரம் ஒருமுறை உடல் முழுவதும் தலைசேர்த்து நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் பூசி மசாஜ் செய்து குளிக்கவும். அப்படி தலை குளிக்கும் போது சீயக்காய் பவுடர் (அ) மூலிகை பவுடர் கலந்து குளிக்கலாம். உடலுக்கு சோப்பு பயன்படுத்தாமல் கடலைமாவு, மூலிகை பவுடர் தேய்த்து குளிக்கலாம். அதிக மணம் பவுடர், சோப்பு, சென்ட் உபயோகிப்பதை தவிர்க்கவும்.

கால் பாத பராமரிப்பு!

* எலுமிச்சை ஒரு இயற்கை ஸ்க்ரப். இது பாதங்களின் தோல் வறண்டு போகாமல் இருப்பதை கட்டுப்படுத்தும்.  எலுமிச்சை சாறுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தளர்ந்த பாதங்களில் தேய்க்கும் போது அதன் ஈரப்பதம் அதிகரிக்கிறது.
* மழைக்காலத்தில் சாலையில் எங்கும் தண்ணீர் தேங்கி இருக்கும். நாம் அதை எல்லாம் கடந்து தான் வரவேண்டும். அவ்வாறு வரும் போது அது நம் பாதங்களில் உள்ள சருமத்தை பாதிக்கும். அந்த சமயத்தில் ஒரு பெரிய டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து, பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.
*  3 கப் வெதுவெதுப்பான பாலுடன் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு டப்பில் ஊற்றி அதில் கால்களை பத்து நிமிடங்கள் ஊறவைத்து வெந்நீரில் பாதங்களை சுத்தம் செய்யவும்.  வறட்சி நீங்கி பாதங்கள் பொலிவு பெறும்.
*  பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால், அதில் தேங்காய் எண்ணெயை தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
* முல்தானி மிட்டி, வேப்பிலை, மஞ்சள் மற்றும் லாவெண்டர் எண்ணெயை சிறிது தண்ணீரில் பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இதனை பாதங்களில் தடவி அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு பாதங்களை மசாஜ் செய்து, ஆலிவ் எண்ணெய் கொண்டு சுத்தம் செய்யவும். பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகி பொலிவடையும்.
* ஆரஞ்சு பழத் தோல் பவுடர், பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் பாதங்களை கழுவவும். வெடிப்பு நீங்கி மிருதுவாக காட்சியளிக்கும்.

தொகுப்பு: ப்ரியா

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!