வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக ஒரு லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை ஆட்டிபடைத்து வருகின்றது. இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்து விட்டது. இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ், அமெரிக்கா உட்பட 135 நாடுகளில் தற்போது அதிக வீரியத்துடனும், வேகமாகவும் பரவி வருகிறது. குறிப்பாக, கொரோனா தடுப்பூசி போடாத பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.