நாகர்கோவில்: தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி), அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டம்தோறும் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு மாதிரி பள்ளிகள், நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆகஸ்ட் 1 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்புவாரியாகவும் மற்றும் தமிழ் வழி, ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.