சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கியுள்ள போதிலும், ஆளும் பாஜ ஜனநாயக நெறிமுறைகளையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் நிராகரித்து அவை நடவடிக்கைகளை முடக்கி வைத்துள்ளது.
இந்தச் சூழலில் விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தவும், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணை ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகள் சட்டம் 2019 ரத்து செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள் தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்த முடிவுசெய்யப்படுள்ளது. இத்தகைய மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.