சென்னை: அரசு விடுத்துள்ள குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் (உறுப்புக் கல்லூரிகள்) மற்றும் சுயநிதி பொறியில் கல்லூரிகளில் 2021-22ம் கல்வியாண்டுக்கான நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். மேலும் வருகிற 10ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் பதிவுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணவர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு கல்லூரிகளில் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். www.gct.ac.in / www.tn-mbamca.com என்ற இணையதளம் சென்று வருகிற 11ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் பதிவு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தல் வேண்டும். கோயம்புத்தூர், சேலம், பர்கூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செப்டம்பர் 5ம் தேதிக்குள் www.ptbe-tnes.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளங்கள் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.