கடைசி பக்கத்தில் பெயர், உரிமம் எண், இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரம் செல்லாது

* எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

* பத்திர பதிவுத்துறை அதிரடி

சென்னை: ஆவணங்களில் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது.தமிழகத்தில் போலி பத்திரம் பதிவாவதை தடுக்க பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவு ஒன்றை பிறப்பித்து்ளார். அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர், வழக்கறிஞர் பெயர், உரிமம் எண் கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பம் இட வேண்டும்.

இந்த நடைமுறை ஆகஸ்ட் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று அனைத்து பதிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மாதிரி படிவம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆவணத்தின் இறுதி பக்கத்தில் 2 சாட்சிகளின் பெயர், தந்தை பெயர், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண் இடம் பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து கீழ்ப்புற பகுதியில் சான்று செய்தவர் என்று குறிப்பிட்டுள்ளதில், ஆவண எழுத்தர் புகைப்படம், அவரது கையொப்பம், ஆவண எழுத்தர் பெயர், முகவரி, மொபைல் போன் எண், ஆவண எழுத்தர் உரிமம் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

இந்த ஆவணத்தின் கடைசி பக்கத்தில் முழு விவரம் இல்லா விட்டால் பத்திரப்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி ஆவணம் தயாரிப்பில் ஏதாவது தொடர்பு இருப்பின் அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: