மின்வாரிய அலுவலகங்களில் நள்ளிரவில் அமைச்சர் ஆய்வு: போதை ஊழியர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னையில் அறிவிப்பில்லாத மின்தடை அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அமைச்சர், அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, பொதுமக்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை எடுத்து அமைச்சர் பேசியபோது, ‘எங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும்’ என ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அமைச்சர் கூறினார்.

இதையடுத்து, கொருக்குப்பேட்டை துணை மின்வாரிய அலுவலகத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அலுவலகத்தை ஆய்வு செய்தார். அப்போது, ஊழியர் ஜெகன் என்பவர், மதுபோதையில் பணியில் இருப்பது தெரிந்தது. அவரை, அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, தண்டையார்பேட்டை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறிந்த அமைச்சர், அங்கு சென்று மின் இணைப்பை சரி செய்யும் பணியை பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம், எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறினர். அதற்கு அமைச்சர், இனி புகார் தெரிவித்தால், சில மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார்.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சியில் மின்மாற்றிகள் பல இடங்களில் மாற்றப்படவேண்டிய சூழல் இருந்தும் அவை மாற்றப்படவில்லை. தற்போது முதல்வரின் அனுமதி பெற்று 6800 மின்மாற்றிகள் 625 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதை நிறுவும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவில் முடிக்கவேண்டும் என அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கூறி உள்ளேன். குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அலுவலர்கள் அலட்சியமாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: