ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 5வது பதக்கம் : மல்யுத்தம் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!!

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், மல்யுத்த வீரர் ரவிகுமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 125 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பிரமாண்ட குழுவுடன் களமிறங்கிய இந்தியா பதக்க வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்திலேயே மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றது நம்பிக்கையை அதிகரித்தது. எனினும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் முன்னணி வீரர், வீராங்கனைகள் சாதிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, பாக்சிங் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன்  வெண்கலப் பதக்கம்,ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 4ஆக அதிகரித்தது. இதனிடையே நேற்று நடந்த ஆண்கள் மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா தகுதி பெற்றதை அடுத்து, இந்தியாவுக்கு 5வது பதக்கம் உறுதியானது. இந்த நிலையில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமாரை ரஷிய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜார் உகுயேவ் வீழ்ந்து தங்கம் வென்றார்.ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டி அணியின் ஜவுரிடம் 4-7 என்ற கணக்கில் வீழ்ந்தார்.

Related Stories: