தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு!: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர்‌ புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 9ல் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌ எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அரபி கடலில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு, வடக்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: