பந்தலூர்: பந்தலூர் அருகே கல்லீரல் பாதித்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பொதுமக்கள் நிதி உதவி அளித்தனர். பந்தலூர் அருகே எருமாடு ஓனிமூலா பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்தியா. இவர்களது 9 மாத பெண் குழந்தை ஜெய்பிரபா மஞ்சக் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை பித்தப்பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர். மேலும், குழந்தைக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை அல்லது வேலூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும், செலவு ரூ.35 லட்சம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். கூலி வேலை செய்து வரும் பிரபாகரனுக்கு அவ்வளவு பணம் திரட்ட முடியவில்லை. குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.