திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா? போலீஸ் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது. அருகில் ரத்தக்கறை தோய்ந்த மரக்கட்டை கிடந்தது. இதனால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து சடலத்தை எரித்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர்-சேமங்கலம் செல்லும் சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருத்துறையூர் பகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் மர்மமான முறையில் சுமார் 30வயது மதிக்க தக்க பெண் சடலம் பாதியளவு எரிந்த நிலையில் கிடந்தது. காலில் மெட்டி இருந்தது. மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதை  கண்ட அப்பகுதி மக்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விழுப்புரம் டிஎஸ்பி பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண் சடலம் கிடந்த இடத்தின் அருகில் சீப்பு, செருப்பு, எரிந்த நிலையில் செல்போன் மற்றும் ரத்த கரையுடன் மரக்கட்டையும் கிடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்றும் அவர் நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா?  அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: