கொடைக்கானலில் சிறுத்தை நடமாட்டமா?: வனத்துறையினர் கண்காணிக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் வனத்துறை கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் நகர் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமைகள், மான்கள், செந்நாய்கள், மலைபாம்புகள், சாம்பல்நிற அணில்கள், குரங்குகள், மயில்கள் என காட்டு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. அதில் மான், சிறுத்தை, யானை, பன்றி உள்ளிட்ட  விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி விவசாய  நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் நாயுடுபுரம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும்,  சிறுத்தையின் கால் தடம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை  கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும்  எழுந்துள்ளது. இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், வனத்துறையினர் இப்பகுதியில் சோதனையிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.

Related Stories: