×

தமிழ்நாடு பாட புத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியைக் குறிக்கும் பெயர்கள் நீக்கம்: தமிழ்நாடு அரசு அதிரடி..!

சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய பாட புத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த  சாதியைக் குறிக்கும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக பாடநூல்களில் தமிழறிஞர்களின் பெயரின் பின்னால் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், 12ம் வகுப்புக்கான தமிழ் புத்தகத்தில் தமிழ்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பெயர் உ.வே.சாமிநாதர் என மாற்றப்பட்டுள்ளது.பண்டைய காலத்துப் பள்ளிக் கூடங்கள் என்ற பெயரில் உ.வே.சா. எழுதிய பாடம் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உ.வே.சா. ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயர் மீனாட்சி சுந்தரனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயரை வேதநாயகம் என்று பாடநூலில் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழறிஞர்கள் டி.டபிள்யு. தாமோதரம் பிள்ளையின் பெயரை தாமோதரனார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயரை பாடநூலில் ராமலிங்கனார் ஆக மாற்றி உள்ளனர்.  அதுபோல அனைத்து தமிழறிஞர்களின் சாதி பெயர்களும் நீக்கியே புத்தகம் இனி வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாதி அடையாளங்களைக் கடந்து தமிழ்ச் சான்றோர் பெயர்களில் சாதிப் பெயர்களை நீக்கி இருப்பதால் தமிழறிஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் சில பாடங்களில் உள்ள தீக்ஷிதர், தேசிகர் போன்ற சாதிப் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. சாதிக்கு அப்பாற்பட்ட தமிழ்ச்சான்றோர் பெயர்களை மாற்றாமல் விட்டுவிட வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் கருத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Tamil , Tamil Nadu, text books, caste names, removal
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...