சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி நடிகர் தனுஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நுழைவு வரியாக 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்யலாம் என்று 2015ல் உத்தரவிட்டது.