வெண்கல பதக்கம் வென்றார் லவ்லினா

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த போட்டியின் வெல்ட்டர் வெய்ட் (64-69 கிலோ) பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் நடப்பு உலக சாம்பியனான சுர்மெனெலி புசெனாஸுடன் (துருக்கி) நேற்று மோதிய லவ்லினா கடுமையாகப் போராடினாலும்,  சுமெனெலியின் ஆக்ரோஷமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவினார். குத்துச்சண்டையில் அரையிறுதியில் தோற்கும் 2 வீரர், வீராங்கனைகளுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் என்பதால், லவ்லினா மூலமாக பதக்க வேட்டையில் இந்தியாவின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பல்வேறு தடைகளையும் சவால்களையும் முறியடித்து ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள லவ்லினாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

முதல்வர் வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்னுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து, அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடி, தன் தாய்க்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வண்ணம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாம் பதக்கத்தை லவ்லினா பெற்றுத் தந்துள்ளார் என்பதை அறிந்து மகிழ்கிறேன். அவர் வென்ற வெண்கலப் பதக்கத்தைவிடவும் அவர் வாழ்க்கையே இந்தியர்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்கமளிப்பதாக உள்ளது என முதல்வர் பாராட்டி உள்ளார்.

Related Stories: