6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் படுத்து விவசாயிகள் போராட்டம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் - முதல் ஆந்திர மாநிலம்  சித்தூர் வரை  128 கி.மீ. தூரத்திற்கு ₹3,200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.

இதற்காக, ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்கள் பாதிக்கப்படுகிறது. பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. இதில், ஊத்துக்கோட்டை வட்டத்தில் சென்னங்காரணை கிராமத்தில் தான் முதன் முதலில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு  ஜூலை மாதம் 1ம் தேதியன்று 6 வழிச்சாலைக்காக அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது. இதற்கான, விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.  

இதில், விவசாயிகளிடம் 15 ஆவணங்கள் கேட்டுள்ளனர். இதற்கு, விவசாயிகள் தரமுடியாது என்று கூறி ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, விவசாயிகள் கூறுகையில், ‘6 வழிச்சாலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அங்கீகாரம் பெறவில்லை. விவசாய நிலம் பாதிக்கப்படுவதால், ஒரு குழு அமைத்து 3 போகம் விளையும் நிலங்களை காப்பாற்ற வேண்டும். முதல்வர் விவசாய நிலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளோம்’ என்றனர்.

Related Stories: