குளிர்பானம் குடித்த சிறுமி ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு: உடலும் நீல நிறத்திற்கு மாறியதால் பரபரப்பு

சென்னை:  சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகள் தாரணி(13). இவர் தன் வீட்டு பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று, குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அதோடு, ரஸ்னா பாக்கெட்டையும் வாங்கி குடித்துள்ளார். இரண்டையும் குடித்த சில நிமிடங்களிலேயே தாரணி வாந்தி எடுக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் மூக்கில் இருந்தும் ரத்தம் வந்துள்ளது. இதனால் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார். அவரது உடம்பெல்லாம் நீல கலரில் மாறி விட்டது. இதை பார்த்து பயந்து போன குடும்பத்தினர், தாரணியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

ஆனால், தாரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து வந்து, தரணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு தாரணி குடித்த குளிர்பானத்தில் இருந்து கொஞ்சமாக எடுத்து, அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மளிகை கடை மற்றும் சிறு சிறு கடைகளில் பெயர் மற்றும் தேதி ஆகியவை இல்லாமல் உணவு பொருட்களை விற்க கூடாது என்று விதி உள்ளது. ஆனாலும் இதை சிலர் கடைப்பிடிப்பதில்லை. இதனால், பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இது குறித்து கடைக்காரர்களிடம் தரணியின் உறவினர்கள் கேட்டபோது, கடைக்காரர்கள் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.இந்த மளிகை கடையில் காலாவதியான பொருட்களையும், தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையிலுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுமி குடித்த குளிர்பானம் போன்ற 17 பாட்டில்கள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் விற்காமல் மீதம் உள்ள பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே சிறுமியின் பிரதே பரிசோதனையில், மூச்சுக்குழலில் உணவுத்துகள்கள் இருந்ததாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் டாக்டர்கள் தெரிவித்ததாக  சாஸ்திரிநகர் போலீசார் தெரிவித்தனர்.மேலும் சிறுமியின் உடலில் குளிர்பானத்தில், விஷம் ஏறி இருக்கிறதா? என்பதை கண்டறிய சிறுமியின் உடல் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதன் முடிவில் தான் சிறுமியின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: