×

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் நிலை என்ன?.. தமிழக அரசு, அறநிலையத்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவற்றின் வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்களை  விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது.

பால் கொடுப்பதை நிறுத்திய இந்த பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளன. இதுசம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனிநபர்களுக்கு பசுக்களை வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய  வேண்டும். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2021 வரை கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.

 கோயில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைக்கவேண்டும். கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு இலவசமாக வழங்க தடை விதிக்க வேண்டும். கோயில்களின் சொத்துக்கள் அரசின் சொத்துக்கள் அல்ல. கோயில் சொத்துக்களை மதம் சார்ந்த விவகாரங்களைத் தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விலங்குகள் கருணையுடன் நடத்தப்பட வேண்டும். மதம் சார்ந்த நம்பிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனுதாரர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை முறையாக பராமரிக்க வேண்டும். தானம் வழங்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?, அவற்றின் வயது?, பாலினம்? உள்ளிட்ட விவரங்களை  விரிவான அறிக்கையாக 4 வாரங்களில் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 5 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,Department of Ethical Response , What is the status of cows donated to temples across Tamil Nadu?
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...