புதுடெல்லி: பிரபல பாப் பாடகர் மீது குடும்ப வன்முறை வழக்கை டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளதால், பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் பாடகரும், நடிகருமான யோ யோ ஹனி சிங் என்ற ஹிர்தேஷ் சிங் (38), அவரது மனைவி ஷாலினி தல்வார் ஆகியோர் டெல்லியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஷாலினி தல்வார் டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகாரை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது கணவர் ஹிர்தேஷ் சிங் என்னை உடல், மனம், வார்த்தைகளால் துன்புறுத்தி வருகிறார்.
எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பாடகரான அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, என்னை அவர் மதிப்பதில்லை. மாறாக அவர் என்னை துன்புறுத்த தொடங்கினார். மதுபோதைக்கு அடிமையான அவர் என்னை பல வகையிலும் கொடுமைப்படுத்தி வருகிறார். பல பெண்களுடன் தொடர்பில் உள்ளார்’ என்று ஷாலின் தல்வார் தரப்பில் வழக்கறிஞர்கள் சந்தீப் கபூர், அபூர்வா பாண்டே, ஜி.ஜி.காஷ்யப் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் நீதிபதியிடம் முறையிடுகையில், ‘எதிர்மனுதாரரின் பெயரில் உள்ள சொத்துகளை தனிநபரோ, கூட்டாகவோ மூன்றாம் நபருக்கு விற்கவோ, தானம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஹிர்தேஷ் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும், வரும் ஆக. 28ம் தேதி விசாரிக்க உள்ளதாக கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
குடும்ப வன்முறை புகாருக்கு ஆளான பாடகர் ஹிர்தேஷ் சிங், சினிமா தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாப் பாடகர், பாடலாசிரியர், திரைப்பட நடிகர் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார். பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரை சேர்ந்த இவர், தற்போது டெல்லியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.