சொல்லியும் கேட்காததால் ஆத்திரம்: மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற மேஸ்திரி

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ேபரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டில்லிபாபு (50), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தம்பதி இருவரும் பிரிந்து அதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். அதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55). பேரணாம்பட்டில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்த தம்பதி இடையேயும் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கோவிந்தசாமி தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கோவிந்தசாமி, லட்சுமி வீட்டிற்கு அடிக்கடி சென்று பேசி வந்ததையடுத்து கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த டில்லிபாபு, கோவிந்தசாமியிடம் ‘நீ ஏன் என் மனைவி வீட்டிற்கு செல்வதை  நிறுத்திக்கொள்’ எனக்கூறி வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத கோவிந்தசாமி  நேற்று லட்சுமி வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு தனது வீட்டிற்கு இரவு 10 மணிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டில்லிபாபு தான் கொண்டுவந்த அரிவாளால், கோவிந்தசாமியை சரமாரி வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த டில்லிபாபுஅங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கோவிந்தசாமியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், உம்ராபாத் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உம்ராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய  டில்லிபாபு இன்று காலை ஆம்பூர் டவுன் போலீசில் சரணடைந்தார். அவரை, போலீசார் கைது செய்து விசரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: