சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ஆலோசனையின்படி நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி மனித ஆற்றல் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் சோதனை அடிப்படையில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது மழை அவ்வப்பொழுது பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.