கேரள வியாபாரிகள் வருகை குறைவால் நகராட்சி சந்தையில் மாடுகள் விற்பனை மந்தம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தைக்கு நேற்று, வெளி மாநில மாடுகள் வரத்து அதிகமாக இருந்தாலும், கேரள வியாபாரிகள் வருகை குறைவால், விற்பனை மந்தமானது.

 பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில் ஒவ்வொரு வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தை நாளின்போது, பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரத்து இருக்கும். அதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஜூன் மாதங்களில் நடந்த சந்தை நாட்களின்போது, மழையால் மாடுகள் வரத்து சற்று குறைவாக இருந்தது. பின் கடந்த வாரம் நடந்த சந்தைநாளின்போது வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகமாக இருந்ததுடன், கேரள வியாபாரிகள் அதிகம் வருகையால் மாடுகள் விற்பனை அதிகரித்துடன், விரைந்து விற்பனையாகியுள்ளது.

நேற்று நடந்த சந்தைநாளில், உள்ளூர் பகுதியிலிருந்து மாடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தாலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மாடுகள் வரத்து அதிகரித்தது. அதிலும் எருமை மாடுகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாகி, சந்தையின் பெரும் பகுதி எருமைகளே தென்பட்டது. ஆனால், கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, அம்மாநில வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்தது. பெரும்பாலான வியாபாரிகள் கேரள எல்லையிலேயே திருப்பி விடப்படுகின்றனர்.

இதனால், மாடுகள் விற்பனை மந்தமாக விலையும் குறைவானது. இதில், கன்றுக்குட்டி ரூ.13 ஆயிரம் வரையிலும், எருமை மற்றும் காளை மாடுகள் ரூ.28 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.30 ஆயிரம் வரையிலும் என கடந்த வாரத்தைவிட ரூ.3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை என குறைவான விலைக்கு விற்பனையானதாக, மாட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: