கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு தமிழக எல்லையில் தீவிர சோதனை

கூடலூர் : கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தேனி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு பகுதியில் தமிழக போலீசார், வருவாய்துறையினர், சுகாதாரத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேனி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது.

இதனால் மாவட்ட எல்லைப் பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய சோதனை சாவடிகளில் தேனி மாவட்டத்திற்குள் வருகை தருகின்ற நபர்களிடம் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகடிவ் சான்று அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேனி கலெக்டர் முரளிதரன் அறிவித்தார்.

இதையடுத்து தமிழக எல்லை குமுளி, சோதனைச் சாவடியில் தமிழக போலீசார், வருவாய்துறையினர் கேரளாவிலிருந்து வருபவர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கேரள அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் கடந்த 17ம் தேதி முதல் கோவிட் நெகடிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டது. இப்போது தமிழக பகுதியிலும் நெகடிவ் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் இரு மாநிலத்திற்குள்ளும் தேவையற்ற மக்கள் போக்குவரத்து குறைக்கப்படும். மிக முக்கிய காரணம் என்றால் மட்டுமே செல்வார்கள். இதனால் போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவல் குறையும் என்றனர்.

Related Stories: