‘குருப் 1ல் பாஸ்.... டிஎஸ்பி ஆகிட்டேன்’ மனைவியின் ‘டோஸ்’ தாங்காமல் போலீஸ் கமிஷனராக ‘அவதாரம்’: போலி போலீஸ் கமிஷனர் விவகாரத்தில் பரபரப்பு தகவல்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் டோல்கேட்டில் போலி போலீஸ் கமிஷனராக வலம் வந்த சென்னை கொளத்தூர் ஜீவா நகரை சேர்ந்த விஜயன் (42) என்பவரை நேற்று முன்தினம் பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விஜயன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஆனதால், வேறு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது மனைவி கொளத்தூரில் பிளே ஸ்கூல் நடத்தி வருமானம் ஈட்டி வருகிறார். ஆனால் இவர் வீட்டில் வேலை இல்லாமல் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை தேட முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர் மனைவியிடம் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, டிஎஸ்பி ஆனதாக பொய் சொல்லியுள்ளார். மேலும் தான் தற்போது போலீஸ் கமிஷனராக உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். இதனை நம்ப வைப்பதற்காக விஜயன், கோவையில் இவரது குடும்ப நண்பரான ஜெயமீனாட்சி என்பவரின் பெயரில் ஜீப் வாங்கியுள்ளார். இதை போலீஸ் வாகனம் போல ரூ. 2 லட்சம் செலவில் மாற்றியுள்ளார். இந்த ஜீப்பை எடுத்து கொண்டு அடிக்கடி விசாரணைக்காக மனைவியிடம் கூறிவிட்டு வெளியூர் சென்று விடுவார். பிறகு வீட்டில் வந்து 10 நாட்கள் ஓய்வு எடுப்பார். பின்னர் திரும்பவும் இதுபோல் விசாரணை என்ற பெயரில் பல ஊர்கள் சுற்றி வந்துள்ளார். தற்போது போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: